552 திருசிராப்பள்ளி திருப்புகழ் ( - வாரியார் # 333 ) |
பகலவன் ஒக்கும் முன் திருப்புகழ் அடுத்த திருப்புகழ் |
தனதன தத்தம் தனதன தத்தம் தனதன தத்தம் ...... தனதான |
பகலவ னொக்குங் கனவிய ரத்னம் பவளவெண் முத்தந் ...... திரமாகப் பயிலமு லைக்குன் றுடையவர் சுற்றம் பரிவென வைக்கும் ...... பணவாசை அகமகிழ் துட்டன் பகிடிம ருட்கொண் டழியும வத்தன் ...... குணவீனன் அறிவிலி சற்றும் பொறையிலி பெற்றுண் டலைதலொ ழித்தென் ...... றருள்வாயே சகலரு மெச்சும் பரிமள பத்மந் தருணப தத்திண் ...... சுரலோகத் தலைவர்ம கட்குங் குறவர்ம கட்குந் தழுவஅ ணைக்குந் ...... திருமார்பா செகதல மெச்சும் புகழ்வய லிக்குந் திகுதிகெ னெப்பொங் ...... கியவோசை திமிலைத விற்றுந் துமிகள்மு ழக்குஞ் சிரகிரி யிற்கும் ...... பெருமாளே. |
Easy Version: பகலவன் ஒக்கும் கனவிய ரத்னம் பவள வெண் முத்தம் திரமாகப் பயில முலைக் குன்று உடையவர் சுற்றம் பரிவு என வைக்கும் பண ஆசை அகம் மகிழ் துட்டன் பகிடி மருள் கொண்டு அழியும் அவத்தன் குண வீனன் அறிவிலி சற்றும் பொறை இலி பெற்று உண்டு அலைதல் ஒழித்து என்று அருள்வாயே சகலரும் மெச்சும் பரிமள பத்மம் தருண பதத் திண் சுர லோகத் தலைவர் மகட்கும் குறவர் மகட்கும் தழுவ அணைக்கும் திரு மார்பா செக தலம் மெச்சும் புகழ் வயலிக்கும் திகுதிகு எனப் பொங்கிய ஓசை திமிலை தவில் துந்துமிகள் முழக்கும் சிரகிரியிற்கும் பெருமாளே. |
Add (additional) Audio/Video Link
|
|
பகலவன் ஒக்கும் கனவிய ரத்னம் பவள வெண் முத்தம்
திரமாகப் பயில ... சூரியனைப் போன்று ஒளி வீசும் பெருமை வாய்ந்த
ரத்தினம், பவளம் வெண்முத்து மாலைகள் நன்றாக நெருங்கி விளங்க
முலைக் குன்று உடையவர் சுற்றம் பரிவு என வைக்கும் பண
ஆசை அகம் மகிழ் துட்டன் ... மலை போன்ற மார்பகங்களை
உடைய விலைமாதர்களின் கூட்டமே அன்புக்கு இடம் என வைக்கின்ற
பண ஆசையில் உள்ளம் மகிழ்கின்ற துஷ்டன் நான்.
பகிடி மருள் கொண்டு அழியும் அவத்தன் குண வீனன்
அறிவிலி சற்றும் பொறை இலி ... வெளி வேஷக்காரன். மோக
மயக்கம் கொண்டு அழிகின்ற வீணன். இழி குணத்தோன். மூடன்.
கொஞ்சமும் பொறுமை இல்லாதவன்.
பெற்று உண்டு அலைதல் ஒழித்து என்று அருள்வாயே ...
பொருள் தேடிப் பெற்றும், உண்டும் அவ்வாறு நான் அலைதலை
ஒழித்து எப்போது அருள்வாய்?
சகலரும் மெச்சும் பரிமள பத்மம் தருண பதத் திண் சுர
லோகத் தலைவர் மகட்கும் குறவர் மகட்கும் தழுவ
அணைக்கும் திரு மார்பா ... யாவரும் மெச்சும், நறு மணம் வீசும்,
தாமரை போன்ற இளமை வாய்ந்த திருவடிகளை உடையவனே,
திண்ணிய தேவலோகத் தலைவரான இந்திரனுடைய மகள்
தேவயானைக்கும் வேடர்கள் பெண்ணாகிய வள்ளிக்கும் தழுவ
அணைக்கின்ற அழகிய மார்பை உடையவனே,
செக தலம் மெச்சும் புகழ் வயலிக்கும் ... பூவுலகம் போற்றுகின்ற
புகழ் பெற்ற வயலூரிலும்,
திகுதிகு எனப் பொங்கிய ஓசை திமிலை தவில் துந்துமிகள்
முழக்கும் சிரகிரியிற்கும் பெருமாளே. ... திகுதிகு என்று பொங்கி
எழும் ஒலி கொண்ட திமிலை, தவில், துந்துபிகளாகிய வாத்தியங்கள்
முழங்கும் திரிசிரா மலையிலும் விளங்கும் பெருமாளே.